விடிந்துவிட்டது
வெளிச்சம் வீட்டுக்குள்
இருள் மனதுக்குள்.....
எழுதலாம் என்றால்
“நீ டுர்ர்...புர்ர் என்று எழுத
நான்தானா கிடைத்தேன்?”
அலுத்துக்கொண்டது காகிதம்
தொலைக்காட்சியை தொட்டேன்
ராசிபலன் சொல்லிகொண்டிருந்தார்
ஜோதிடர் ஒருவர்
என்ராசிக்கு என்னபலன்
என்று கேட்டால்....
“இன்று உனக்கு கடியிருக்கு,
கவனம்” என்றார்
ஜன்னல் வெளியே பார்த்தேன்
அசையாத மரம்
அதில் இரண்டு காகங்கள்
‘எச்சமிட்ட காக்கைகள்’
எழுதியது ஞாபகம்.
கா...கா...என்று கரைவது
வா..வா..என்பது போலிருந்தது
(காகம் கடிக்காது)
கடைத்தெருவுக்கு வந்துவிட்டேன்
எங்கும் மனித தலைகள்
தெருநாய்களை காணவில்லை
குடும்ப அட்டை கேட்டு
கோட்டைக்கு போயிவிட்டனவாம்
(நல்லவேளை தப்பித்தேன்)
அப்படியே கோயிலுக்கு போனேன்
பரதேசிகள் யாரையும் காணவில்லை
பக்கத்து தொகுதியில்
தேர்தல் திருவிழாவாம்
சாமியை சுற்றி ஆசாமிகள் கூட்டம்
மண்டபதூணில் சாய்ந்தது
கண்ணயர்ந்தேன்
நறுக்கென்று கடித்தது எறும்பு
(ராசி பலித்துவிட்டது)
கடித்த எறும்பை கேட்டேன்
ஏன் கடிதத்தாய் என்று.
“எல்லோரையும் எழுதும் நீ
என்னைப்பற்றியும் எழுது” என்றது
“நீ நானாகவும் நான் நீயாகவும்
அடுதப்பிறவியில் பிறப்போம்” என்றேன்.
“அப்ப...சோம்பிக்கிடக்காதே, எழுந்து ஓடு!”
என்றது எறும்பு.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |