எழுதுவதற்கு
ஏதும் வார்த்தைகள் இல்லை
என் எழுதுகோல்
எழுத மறுக்கிறது....
எல்லா வார்த்தைகளையும்-
தமிழில் இருந்த
எல்லா வார்த்தைகளையும்
நீயே எழுதிவிட்டாய்
என் தமிழ்த்தாய் பெற்ற
கவிமகனே!
உன் மறைவுக்கு
கண்ணீர்த் துளிகளையே
கவிதை வார்த்தைகளாய்
உன் காலடியில் சமர்பிக்க...
சொல்லைக் கல்லாக்கி
கவிதையைக் கவின் ஆக்கி
அன்று நீ எழுதிய
ஒரு கண்ணீர் அஞ்சலி...
ஒரு
புலிப் போத்தை ஈன்று-
புறந்தந்து-
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு
அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு வேறுண்டோ என் வாய்க்கு...? என்று
பார்வதியம்மாள் மறைவுக்கு..........
நீ எழுதிய வார்த்தைகளையே
உன் காலடியில் சமர்பிக்கிறேன்
இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள்-எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
இதுமட்டும் போதாது
என் தமிழ்த்தாய் பெற்ற
கவிமகனே!
கவியரசர் கண்ணதாசனுக்கு
நீ எழுதிய கண்ணீர் அஞ்சலி...
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
எழுதுவதற்கு
ஏதும் வார்த்தைகள் இல்லை
எல்லா வார்த்தைகளையும்-
தமிழில் இருந்த
எல்லா வார்த்தைகளையும்
நீயே எழுதிவிட்டாய்
அதனால்
உன் வார்த்தைகளால்
உனக்கு ஒரு மாலை
என் கண்ணீரால் கழுவி
உன் காலடிகளில் வைத்தேன்
(சிவப்பு கலரில் உள்ள வார்த்தைகள் எல்லாம் வாலிபக் கவிஞர் வாலியின் வார்த்தைகள்........காலத்தால் அழிக்க முடியாத இந்தக் கவிமகன் மறைவுக்கு அவரது வார்த்தைகளால் ஒரு கண்ணீர் அஞ்சலி )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |