google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆவலோடு காத்திருக்கிறோம்

Sunday, June 03, 2012

ஆவலோடு காத்திருக்கிறோம்

 

சிக்குவிழுந்து கிடக்குதைய்யா
எங்கள் சிங்கார தலைகள்
சீர்குலைந்து கிடக்குதைய்யா
எங்கள் சின்னஞ்சிறு இலைகள்
உங்கள் வாகனப்புகையிலும்  
குழிவிழுந்த சாலைப்புழுதியிலும்
சிக்குவிழுந்து கிடக்குதைய்யா தலைகள்
சீரழிந்து கிடக்குதைய்யா இலைகள்

கிராமத்து கனிதரும் மரங்களல்ல
உங்கள் நகரத்தை அழகுசெய்ய
நீங்கள் நட்டிவைத்த மரங்கள்
உங்கள் சாலையை சரிசெய்ய
எங்கள் கைகளை ஓடித்ததால்   
அரைகுறை ஆடையில் நிற்கும்  
நகரத்து நாகரிக மங்கைகள் போல்  
நாங்கள் நகரத்து மரங்களைய்யா

நிழல் தரும் மரங்கள் நாங்கள்
நிற்கமாட்டீர்கள் யாரும் நீங்கள்
அவசரவேலை உங்களுக்கு
ஆனாலும் நீங்கள்
கம்பி இணைப்புகளை
இழுத்துச்செல்ல
தவறாமல் போடுவீர்கள்
திருப்பதி மொட்டை எங்களுக்கு

வாகனங்களின் வக்கிர இறைச்சல்களில்
தொலைந்துபோகிறது எங்கள் தென்றல் ராகம்
தள்ளாடுகிறது எங்கள் தாலாட்டுப்பாடல்

எந்த கத்திரிவெயிலுக்கும்
சுகம்தருவோம் நாங்கள்
ஆனாலும் நீங்கள்
அடைந்து கிடப்பீர்கள்
குளிர்சாதன அறைக்குள்   

உங்கள் சாக்கடை நீரைஉறிஞ்சி
எங்கள் தேகமும் நாறுகிறது
உங்கள் நகரத்து நச்சு காற்றால்
எங்கள் சுவாசமும் நாசமானது

அடுத்து மழை வரும் நாளுக்கு
ஆவலோடு காத்திருக்கிறோம்  







இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1